Friday, March 5, 2010

வேலூர் மாரியம்மன் தேர்த் திருவிழா
இன்று குரு கோனியம்மன் தேர் புகைப்படம் facebook ஆல்பம் மூலமாக அனுப்பி இருந்தான். என் நினைவோடை பின்னோக்கிப் பாய ஆரம்பித்து விட்டது. இளமைக் கால தேர்த் திருவிழா........அழியாத கோலங்கள். வேலூர் மாரியம்மன் தேர் திருவிழா கனவுத் திருவிழா. வளர்ந்த கிராமமான வேலூரின் ஸ்பெஷல் விழா .அக்கம் பக்கத்தில் எந்த மாரியம்மன் கோவிலிலும் தேர் கிடையாது.கிழக்குத் தெருவில் உள்ள தேர்முட்டிக்கு செல்வதே ஒரு பெரிய விஷயம். என் தோழி மங்கையின் வீட்டுக்குப் பக்கத்தில் தேர்முட்டி.அவள் வீட்டுக்குப் போகும் சாக்கில் தேரைப் பார்த்தவிட்டு வருவேன்.ஏனோ அலங்காரம் பண்ணாத மரத் தேரின் மீது ஒரு காதல்.
அனேகமாக முழு ஆண்டுத் தேர்வுக்குத் சில நாட்கள் இருக்கும் போது தான் தேர் வரும்.
கோவில் ஆக்ராஹாரத்தின்  பக்கத்தில் தான்.அப்பா வீட்டில் அதிகம் சினிமா பாட்டுக்கேட்க விடமாட்டார்.ரேடியோ இருந்தது.ஆனால் ஞாயிற்றுக் கிழமை மதியம் நீங்கள் கேட்டவை தான் ஒரே வழி.(அப்படியும் பாட்டு மியூசிக் ஆரம்பிக்கும் போதே என்ன பாட்டு என்று சரியாகக் கூறிவிடுவேன்).எனவே தேர்த் திருவிழாவின் போது மைக் செட் கட்டி எல்லாப் பாட்டும் கேட்கலாம் என்பதால் எப்போதும் படிப்பதற்கு அதிகம் கஷ்டப்படாத நான் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்பீக்கர் சத்தம் நன்றாக கேட்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விடுவேன்.பத்து நாட்களும் திருவிழா தான்.பள்ளிக்கூடத்தில் சினிமா பாட்டுப்புஸ்தகம் கைமாறி வரும் பாடல் வரிகள் மனதில் ஏறிக்கொள்ளும்.(என்னுடைய பெரிய குறை என்னால்  மனப்பாடம் செய்ய முடியாது.ஆனால் சினிமாப் பாடல் வரிகள் ஒரு  தடவைக் கேட்டால் அப்படியே பதிந்து விடும்  .......இன்றும் மாணவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.என் இந்த கல்வி இலாக்கா சினிமா மூலமாக பாடம்நடத்தக் கூடாது.)
காப்பு கட்டிய பின் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றப் போவேன்.வாய்க்காலில் தண்ணீர் இருக்காது.காவேரிக்குப் போய் கொண்டு வந்து ஊற்றுவேன்.இதற்கு எல்லாம் ஒன்றும் சொல்லாத் அப்பா தேர் இழுக்கப் போனால் மட்டும் திட்டுவார்.தேர் இழுப்பவர்கள் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டுவார்கள்.அப்பாவுக்குத் தெரியாமல் தேர் இழுக்கப் போனால் நனைந்த டிரஸ் காட்டிக் கொடுத்து விடும். பிறகு என்ன ?அர்ச்சனைதான்.மாலையில் தேர்க் கடை உலா.எப்படியும் இரண்டு ரிப்பன் கொஞ்சம் வளையல் ஸ்ரீதருக்கு பந்து என்று ஒரு பத்து ருபாய் செலவு வைத்து விடுவோம்.கோணபுளியங்கை ,கலர் ஐஸ் ராட்டினம்............நான் விளையடுகிறோனோஇல்லையோ கண்டிப்பாக வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவேன்.என் friends ராட்டினத்தில் விளையாடும் போது பயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பேன்.கர்சிப் கீழே வைத்து விட்டு அடுத்த சுற்று வரும் போது எடுக்கும் என் தோழிகள் எனக்கு பெரிய வீராங்கனைகள் தான்.இத்தனை விஷயங்களுக்கும் என்னுடன் துணைக்கு வருவது யார் தெரியுமா.....என் தோழி ராதா.

Wednesday, February 24, 2010

நானும் அப்பாவும்
அப்பா எல்லோருக்கும் போல ஒரு அன்பான அப்பா .என் செல்ல அப்பா.எனக்குச் செல்லம் கொடுதததினால் அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்கிய அப்பா.நான் படிக்கமாட்டேன் என்று சொன்னதினால் என்னை ஹிந்தி படிக்கவேண்டாம் என்று சொன்ன அப்பா. (ஆனால் பின்னால் அதே ஹிந்தி என் வாழ்வின் ஆதாரம் ஆனது வேறு கதை.
அப்பாவின் ஹிந்தி வகுப்புகள் இன்று எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஹிந்தி நோட்ஸ் எழுதி கடைசியில் ஒரு தாமரைப்பூ இரண்டு இலைகள் வரைவார்.அதை நானும் செய்தேன்.
பாட்டு கிளாஸ்     நான் அப்பாவை மிகவும் சோதித்த வகுப்பு.எனக்கே நினைவே இல்லை.நான் எதனை முறை பாட்டு கற்க ஆரம்பித்தேன்  என்று.ஜண்டை வரிசை வரை சில சமயம் போகும் சில முறை ஸ்வரஜதி வரை....சில தடவை வர்ணம்   .....ஆனால் நான் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை.
சரி விட்டது ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று பாட்டுக்கு டாட்டா சொல்லி வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.பாவம்......அப்பா பாண்டமங்கலம் வரை சைக்கிளில் கூடிக் கொண்டு போவர்.ம்ம்ம்ம்ம்ம்        அதுவும் ..பாதியில் நின்றது.....
சோ இப்போ......எனக்கு எதுவும் முழுதும் தெரியாது.அதே சமயம் குறை கண்டுபிடிக்க மட்டும் தெரிந்து விட்டது. ....சரியான வாத்தியார் புத்தி........அப்புறம்......நான் முழுவதுமாக கற்றது பரத நாட்டியம் தான் .அது.....ஒரு பெரிய தொடரும் போட்டு எழுத் வேண்டிய கதை.....சோ ....(தொடரும்)

Monday, February 15, 2010

அழுத்தம்  வெல்வீர்......!
நண்பர்காள்......
யாரென்று பார்க்கிறீர்களா .......நான்...தான்....
என்ன தெரியவில்லையா.....?
நான் தான் உங்கள் நலம் விரும்பி... பேசுகிறேன்.
சற்று செவி மடலை என் பக்கம் சாய்ப்பீர்...........
உங்களுள் அழுத்தம்.....அழுத்தம்.....சரியா...?
என்ன எனக்கா   ?அழுத்தமா...?
பதற்றம் வேண்டாம்....நண்பரே...
நீங்கள் கவனம் சிதறி விட்டீர்கள்.என்ன ? சரியா ?
என்ன?.....கவனச் சிதறலா   ........?எனக்கா...?
ஏன் கேட்கமாட்டீர்கள்......?
உங்கள் குழப்பம் ...மன எரிச்சல்....வார்த்தை விபரீதம் ,
பார்த்தீர்களா.......பார்த்தீர்களா.......
தனிமனித உறவு கேட்டு விட்டதே....
மற்றவர்கள் ஒத்துழையாமை இயக்கம்
ஆரம்பித்து விட்டார்கள்....அடடா.....
சிக்கல்கள் சூழ்ந்தன.
இரத்த அழுத்த மானியில்
மெர்குரியின் அளவு
மேலும் கீழுமாக ......தவிக்கிறதே.....
அதோ மெல்ல நினைவு கரைகிறதே...
மருத்துவமனை..... டெட்டால் வாசனை....
படுக்கை...டாக்டர்கள் ....
மருந்து...மாத்திரை,,,மயக்கம்....
ஆழ்ந்த இழுத்து விட்ட மூச்சு....
நிம்மதியான   ஆழ்நிலை மயக்கம்....
அப்பாடா...தெளிந்து விட்டீர்கள்.
புரிந்ததா...சூழ்நிலைப் புரிதல் அவசியம்.
அதி அவசியம்.
கருத்துப் பரிமாற்றம் ....தேவை.
மிக மிகத் தேவை.
என்ன வேலை சுலபமாகிவிட்டது  இல்லையா....
பாராட்டுக்கள்...மேன்மையான பாராட்டுக்கள்.
மகிழ்ச்சியா நண்பரே......
அழுத்தம் வெல்வீர்.......
மன அழுத்தம் வெல்வீர்......
இது உபதேசமல்ல....
முன்னெச்சரிக்கை வாதம்
அதோ..இன்று அதே அழுத்தம் என்னையும்
தொடருகிறது.
இது ஒரு தொடர் நிகழ்காலம்,
புரிதல் இருந்தால்
அழுத்தக் கடலை அனுமன் போலத்
தாண்டி...விடலாம்.
என்ன நண்பரே....தயார......தானே...
களம் இறங்குங்கள்.
வெல்வீர்.......அழுத்தம்...வெல்வீர்.


இந்தக் கவிதையின் வேர் ஒரு காவல்துறை அதிகாரியின் உரை.ஆங்கில உரையை என்னிடம் கொடுத்து தமிழாக்கம் செய்துத் தரச் சொன்னார்கள்.என் கற்பனையும் சேர்ந்து கொண்டது.அந்த அதிகாரிக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு மழை.எனக்கும் சந்தோஷம்.உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, February 7, 2010

ஈஷாவில் என் அனுபவம்

நேற்று ரமாவுடன் ஈஷா சென்று இருந்தேன்.சுதா ரகுநாதன் கச்சேரி .இது வரை நேரில் கேட்டதில்லை.ரமாவுடன் சென்றது இரு புது அனுபவம்.
சுதா ஆரம்பிக்கும் போது சற்று சுருதி சேராதது போலத் தான் இருந்தது. ஸ்ரீ விக்னராஜம் பஜே.. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாட்டில் விநாயகப்பெருமானை அழகாக பல்லக்கில் ஏற்றி குதித்து கும்மாளமிட்டு கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.இந்த பாட்டை எத்தனையோ முறை கேசட்டிலும் ரேடியோவிலும் கேட்டு இருக்கிறேன்.நேரில் கேட்டது ஒரு புது அனுபவம் தான்.
அப்புறம் என் நினைவுப் பெட்டகத்தை உசுப்பி விட்டது "இடது பதம் தூக்கி"பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்.இதில் சிறப்பு   என்ன தெரியுமா ? நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டபிறகு முதல் முதலாக மேடையேறி ஆடிய பாடல்.நான் பத்தாவது படித்துக்கொண்டு இருந்தேன்.பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா .நான் தான் ஆஸ்தான நர்த்தகி. அப்போது கேசெட் கிடையாது.அம்மா தான் பாடுவார்கள்.ஒவ்வொரு தடவையும் ஆடிப் பழகும் போதும் பாடிப்பாடி அம்மாவுக்கு தொண்டை கட்டி விட்டது.அப்போது எங்கள் வீட்டில் பட்டுப் புடவை கிடையாது.யாரிடமோ இரவல் வாங்கிய ஒரு நீல வண்ணப் புடவை.முதல் முதலாக எனக்கு blouse  தைக்கப்பட்டது.அம்மாவே ஸ்கூலில் இருந்த தையல் மிசினில் தைத்தார்கள்.
எப்படியோ கச்சம் வைத்து கட்டிவிட்டார்கள்.காலில் அணிய சலங்கையும் இல்லை ,கொலுசும் இல்லை.ஏன்/? குஞ்சலம் கூட யாரோ தந்தது தான் .ஆனால் ஏன் முதல் மேடையேற்றம் இன்னும் பசுமையாக ஏன் நினைவில் எட்டிப் பார்கிறது.
எங்கிருந்தோ எங்கோ போய் விட்டேன் இல்லை.சரி சரி இப்போது நிகழ் காலத்திற்கு வருகிறேன்.
ஈஷாவில் பக்தர்கள் எல்லோரும் இசையின் நுணுக்கங்கள் புரிந்ததோ இல்லையோ மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல் தன்னை மறந்து ஈடுபட்டார்கள்.என்னால் தான் அந்த மயக்கத்தை ஜீரணிக்க முடியவில்லை.ஒரு வேளை ,நான் வளர்ந்த விதம் அப்படியோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் கச்சேரி முடிந்த பிறகு ஏன் மனதிலும் ஒரு அதிர்வலை வீசிக்கொண்டு இருந்தது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம்.நல்ல அனுபவம் தான்.

Wednesday, January 27, 2010

இதுவும் என்னை பாதித்த கவிதை தான்
அவன் பெயர் வெளிச்சம்
அவன் பெயர் அன்பு
அவன் பெயர் சக்தி
அவன் என் சொல்லின்
துணைவன்.......
 அவன் யார்........

அவன் ஆணையிட்டால்..
இரவும் பகலாகும்.
பகலும் இரவாகும்.
அவன் இச்சைப்படித்தான்
நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.

அவன் ஏற்பாடு....
பருவ மற்றம்.
அவன் தான் ....
காற்றின் திசை மாற்றி.
அவன் நினைத்தால் போதும்
பூமிப்பெண் பச்சை பட்டு உடுப்பாள்.


அவன் தலையிட்டால்
கடல் நீர் மேகமாகும்.
மேகமும் மழை நீராகும்.

உனக்குத் தெரியுமா
அவன் தீர்மானிக்கும் வரை தான்
மூச்சுக்காற்றும்
உள்ளே போய் வெளியே வரும்.
அப்போது....
நம் நாமாக இருப்போம்.
அவன் முடிவு செய்தால்
நாம் அதுவகிவிடுவோம்.
மரணம் என்பது
பின் மண்டையில் உட்கார்ந்து
எட்டிப் பார்த்தாலும்
அவன் நினைத்தால்
எதுவும் நடக்கும்
எதுவும் நம் கையில் இல்லை......

நீ செய்யும் செயல்கள்
நற்செயலாயின்.....
நீ ஆசீர்வதிக்கப் படுவாய்.
நீ மனிதனாகப்
பிறந்துவிட்டாய்.
இது நீ எப்படிப்பட்டவன்
என்பதற்கான தேர்வு.
மனிதா.......
நீ ஜெயிக்கப் போகிறாயா...?
தோற்கப் போகிறாயா...?

மனிதனே.....
கடவுள் உன்னை உனக்கு உணர்த்துவான்.
மூத்தோர்,முன்னோர்,  கடவுள்
இவர்களிடம் உனக்கு
அன்பு,மரியாதை பக்தி வேண்டும்.
"நான்" இதை விட்டுவிடு.
கடவுள் என்ற மதம்
சொல்லும் வழி
அதுவே
நீ செல்லும் வழி

खुदा   என்ற உருதுக் கவிதை என்னை மிகவும் பாதித்ததுகவிஞரின் கற்பனையும் என் மன சிதறல்களும் இணைந்துள்ளன.

Monday, January 18, 2010

என்னை பாதித்த கவிதை
पुकार
அழைப்பு
திருப்தி என்பதை அறியாத
தாகம்,கவலை,குழப்பம்
நிறைவற்ற மனதுடன்
எப்போதுமே ஒரு
விலக்கப்பட்ட பார்வையுடன்
கம்மிய குரலுடன்
என் மனதில் எழும்
வேதனைக் குரல்.....
ஓங்கி ஒலிக்கிறது
என்னை யாரும் நேசிக்க வில்லை............
கடலுடன் அலைகளின்
த்வந்த யுத்தம்...
கரம் நீட்டி வான் காதலனைத்
தழுவத் துடிக்கும்
அலைக் காதலி,
நீண்டு பரந்துவிரிந்த
தெறித்து விளையாடும்
ஒவ்வொருத் துளித் தண்ணீரும்
வேதனைக் குரல் எழுப்புகிறது......
என்னை யாரும் நேசிக்க வில்லை............

பூமி அன்னையின் கருணைக் கண்கள்
ஏன் என்னைப் பார்க்க வில்லை ?
நிலமகளின் ஒரு கீற்றுப் புன்னகை
என் வாழ்வின் செயல்பாடுகளை
மென்மையாக ,பிரகாசமாக,
வெளிச்சப்புள்ளிகளாய் மாற்றிவிடும்....
ஆனால்....
அவளும் தான் ஓலமிடுகிறாள்
யாரும் என்னை நேசிக்க வில்லை.........

காலைபனியின்  புதியராகம்.
இசைபடும் இனியவேளை.
ஆனால்.....கூடவே
ஒலிக்கும் அத்ருப்தியின்
அபஸ்வரம்........
எங்கும் வஞ்சனை,வேதனை....
துன்பம்,பேராசை....
இருளரக்கன் மெல்ல பூமிப்பெண்ணை
விழுங்கத் தொடங்குகிறான்.
அப்போதும் மெல்லிய விசும்பலுடன்
ஓர் ஓலம்......கேட்கிறது.
யாரும் என்னை நேசிக்க வில்லை........

இருள் அழகியின் நெற்றியில்
பொட்டிடும் நிலா மகள்.
அவளிடம் இருந்து விழாதா?
சுவாதி நட்சத்திரத் துளி.....
என் இதயம் என்னும் முத்துசிப்பியில்
முளைத்திடுமே
வெண் முத்துக் குட்டி.....
ஆனால் அதோ கேட்கிறதே ஓலம்
யாரும் என்னை நேசிக்கவில்லை.......

அங்கே பார் மொட்டுக்களின்
சுமைதாங்கி ..இளம் தளிர்க் கரங்கள்
மெல்லிய கிளை பரப்பி
மலர்க் கூட்டம் சுமக்கும் மரக் கூட்டம்.
இனிய சுவாசத்தால் மணம்
நிறைக்கும் மலர்மொட்டுக்கள்.
ஆனால்.....
அங்கேயும் விஷ முட்கள் ......
பட்டு மலர் இதழ்கள்
காயப் படுத்தப் படுகின்றன.
என் காதில் ஒலிக்கிறதே...
அதே ஓலம்...அதே குரல்..
என்னை யாரும் நேசிக்கவில்லை..........

இறைவன் சிரிக்கிறான்....
அடே...முட்டாளே.....
நேசம் ,பாசம். இரண்டும்
கடைச் சரக்கல்ல...
எங்கும் கிடைக்காது.....
அதை நாம் தான் தரவேண்டும்....
கண்ணீர் துளிகள் அடகு வைக்கப்பட்டால்தான்
உலகம் கடனாகத் தரும்.
வட்டியுடன் நீ தான் அதை திருப்பித்
தர வேண்டும்....
இதை நீ உணர்ந்தால்....
எங்கும் எப்போதும் உன் ஓலம் ஒலிக்காது.
யாரும் என்னை நேசிக்க வில்லை.......

Sunday, January 17, 2010

மதுரை சித்தப்பா
அம்மாவின் தங்கையின் கணவர் என்ற உறவு தான் என்றாலும் அப்பா இளவல் என்று சொல்லி பேசியதாலும் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் .மதுரையின் திருவிழா அறிமுகமானது அவரால் தான்.மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் பாரதியார் பயன் படுத்திய நாற்காலி,அவர் திருத்திய கட்டுரை நோட்டுக்களை காண்பித்த சித்தப்பா என் மனதில் ஹீரோ ஆனார்.தமிழை " இருந்தமிழே .....அருந்தமிழே..செந்தமிழே..விதம் விதமாக அடைமொழியின் வாயிலாக அறிமுகப்படுத்தி தமிழ் மேல் ஒரு தணியாத தாகத்தை ஏற்படுத்தியவர்.
நா பா வின் நண்பர் என்ற செய்தி இன்னும் அவரை என் மனதில் உயரத் தூக்கி வைத்தது.அவர் எம்.ஏ. தேர்வுக்கு தயார் செய்த சிலப்பதிகார உரை என்னை மதுரைக் காண்டத்தைப் படிக்கத் தூண்டியது.
சித்தப்பா என்னை தினமணி பிரஸ் இல் என் 11th தேர்வு முடிவுகளை அச்சாகும் போதே பார்த்து மலைக்க வைத்தார்.அதன் பலனாக அப்பாவிடம் எனக்கு transister பரிசு கிடைத்தது.
அவனியாபுரம் வீட்டில் இருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு நடத்தியே கூடி வந்து என்னை மதுரையின் காதலி ஆகினார்..கோவிலின் உள்ளே தமிழ் சங்கம் நடக்கும் இடத்தைக் காட்டினார்.அப்போது என் கனவுகள் பாண்டியனின் சங்கம் கண்ணுக்குத் தெரிந்தது.
சித்தப்பாவிடம் நான் மலைத்த இன்னொரு விஷயம் அவர் ஒரு அரசியல் வாதி.  தி.மு.க.பேச்சாளர்.நாத்திகம் பேசுவார்.தோளில் துண்டுடன் அவர் பேசும் தமிழ் என்னைக் கட்டி போடும்.
அப்படி நான் பார்த்து வியந்த சித்தப்பா இப்போது வயோதிகம் ,நோய்.ஆகிய காரணங்களால் தளர்ந்து நேற்று என் கைகளை அழுந்த பிடித்த போது மனம் கலங்கி விட்டேன்.காலம் எவ்வளவு கொடூரமானது.மனிதர்களை எப்படி மாற்றிப் போடுகிறது?இது புரியாமல் நாம் இன்னும் குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.