Friday, July 30, 2010

மழை  மழை
நடுவில் நின்று போய் இருந்த மழை சாரல் ஊர்வலம் நேற்று மீண்டும் எட்டிப் பார்த்தது.கலையில் இருந்து வீரிட்டுக்கொண்டு இருந்த தென்னங்காற்று மதியம் ஒய்வு எடுத்துக் கொண்டது.சரி ஜன்னலைத் திறக்கலாம் என்று திறந்தால் வெள்ளி சரிகைத் தூரலாய் மழை சிலிர்த்துக் கொண்டு தூறிக்கொண்டு இருந்தது.அகல விரிய ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டேன்.ஒரு சிலிர்ப்பான குளிர் தோலை ஊடுருவிக்கொண்டு மயிர்க் கால்களைக் குத்திட்டு நிற்க வைத்தது.வெளியே போகும் போது பெயருக்குக் குடை எடுத்துக் கொண்டு சாரல் மழையில் நனைந்தேன்.பஸ் ஸ்டாப்பில் நனைந்த மரங்களும் காற்றில் நடுங்கி என்னை நனைத்தன.அப்பா....எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த மழை குளியல்,இரவில் வரும் அடுக்குத் தும்மலை மறந்து விட்டு நனைந்தேன்.........அருமை......அருமை......

Sunday, July 25, 2010

மிதிலா விலாஸ்

கண் வலியே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் .உன்னால் தான் எனக்கு ஒய்வு கிடைத்தது.புத்தகக் கடைக்குப் போகவும் நேரம் கிடைத்தது.என் நீண்ட நாள் கனவுப் புத்தகம் லக்ஷ்மியின் மிதிலா விலாஸ் வாங்கினேன்.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.இப்போது சீரியல் எடுக்கிறேன் பேர்வழி என்று பழிவாங்குதல் கொலை கொள்ளை ...என்று மனதை வருத்தும் காட்சிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து மனதை கேடுக்கின்றனவே.அந்த இயக்குனர்கள் ஏன்இந்த புத்தகங்களைப் படித்து நாடகமாக எடுக்கக் கூடாது?
கொஞ்சமாவது இந்தக் காலக் குழந்தைகள் வாழ்க்கைப் பாடத்தைப் படிப்பார்களே.....
எந்தவித ஆடம்பரமான வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் அற்புதமான ஆற்றோட்டமானஎழுத்து.
படிக்கும் ஆர்வம் குறைந்த இந்த காலத்தில் வார இதழ்களும் இந்தக் கதைகளை தொடராக வெளியிடலாம்.

Tuesday, July 20, 2010

திருவரங்கன் உலா
எங்கேயோ மெட்ராஸில் இருந்து வந்த மெட்ராஸ் ஐ  எனக்கு கட்டாய ஒய்வு என் ஹிந்தி வகுப்புகளில் இருந்து கொடுத்து விட்டது.கண்ணில் மணல் அள்ளிப் போட்டது போல ஒரு உறுத்தல்.முதல் நாள் வலி கண்ணைத் திறக்க விடவில்லை.டாக்டர் கொடுத்த மருந்து வலியை ஒட்டி விட்டது.என்னடா பண்ணலாம் என்று மனம் துறுதுறு என்று அலைந்த போது என் மகள் என் அக்கா வீட்டில் இருந்து அந்த பொக்கிஷத்தைக் கொண்டு வந்தாள்.
திருவரங்கன் உலா கண்களை இடுக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.என்ன ஆச்சரியம் வலி உறுத்தல் எல்லாம் மறந்து மரத்துப் போனது.
அப்பா ....அந்த ரங்கன் என்ன பாடு பட்டிருக்கிறான் ?
1974 தினமணிக் கதிரில் தொடராய் வந்தபோது மனதில் பதிந்த குலசேகரன் ,வாசந்திகா
அந்த அழகிய மணவாளன் மீண்டும் அவர்களுடன் வாழத் தொடங்கினேன்.
இப்போது பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கத்து கோட்டை மதில்களை காப்பாற்ற என்ன பாடுபாட்டு இருக்கிறார்கள்,
அப்பா சுல்தான்கள் ஆட்சிகாலத்தைப் பற்றிப் பேசும் போது ஆவேசப் படுவார்,அந்த ஆவேசம் இப்போது எனக்கும் வந்தது.சோம்நாத்பூர் இடிபாடுகளைப் பார்த்து விட்டு வந்து அப்பா சொல்லும் போது அப்படி என்ன பெரிய கஷ்டப் பட்டுவிட்டார்கள் என்று ஒரு சின்ன கேள்வி என் மனதில் எழுந்துள்ளது.?அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை
எனக்கு எப்போதுமே ஸ்ரீரங்கம் மிகவும் பிடித்தமான கோவில் .இப்போது இன்னும்....இன்னும்...பிடித்துப் போய் விட்டது இந்த முறை ஸ்ரீரங்கம் போகும் போது நின்று நிதானமாய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் ஆரியபட்டாள் வாசல் குலசேகரன் திரு மதில்....எல்லாமும் பார்க்கவேண்டும்...வீழ்ந்து வணங்கவேண்டும்