Saturday, November 20, 2010

பேலூர் பயணம்
அடுத்த நாள் என்னவோ காலையிலேயே  விழிப்பு வந்து விட்டது.எங்களுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட கோமளா மற்றும் அம்பிகா இருவரும் மலையாளிகள்.அம்பிகா ரொம்பவும் சுறுசுறுப்பு .எழுந்தவுடன் வெந்நீர் வர ஆரம்பித்தவுடன் குளிக்கப் போய் விட்டார். நான் காயத்ரியை எழுப்பினால் கோமளா  "அவளை  ஏன் எழுப்புகிறீர்கள் ?பாவம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்"என்று தடுத்து விட்டார்.நான் எழுந்து என் வேலைகளை முடித்து விட்டு காயத்ரியை எழுப்பினேன்.அதற்குள் மாமா வந்து ஆயிற்றா....நேரம் ஆச்சு....என்று விரட்ட ஆரம்பித்தார்..நிலைமை என்னவென்றால் இன்னும் பாதி பேர் குளிக்கவே இல்லை.காயத்ரி அப்போது தான் குளிக்கப் போய் இருந்தாள்.சரி என் கணவர் குளித்து விட்டால் பேக் பண்ணலாமே என்று அவர்களுடைய அறைக்குப் போனால் துண்டைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.அவருக்கு சரியான கோபம்.இந்த மாமா குளித்தேன் என்று பேர் பண்ணி விட்டு ஓடி விட்டார் நான் இப்போது தான் குளிக்கப் போகிறேன் என்று அறைக்குள் போனார். சரி என்று நான் அவருடைய பெட்டியை பேக் செய்து விட்டு எங்கள் அறைக்கு வந்தால் அந்த விடுதியின் வாட்ச்மேன் பெட்டிகளை கீழே எடுத்துப் போக காத்திருந்தான் .எங்களை அறையை விட்டு போகும் படி விரட்டினான்.நான் சும்மா ஹிந்தியில் சத்தம் போட்டேன் இன்னும் குளிக்கவே இல்லை ...இன்னும் பத்து பதினைந்து நிமிடம் ஆகும் என்று...அவன் என்னமோ முணுமுணுத்துக் கொண்டு போய் விட்டான்..பிறகு ஒரு வழியாக கிளம்பி கீழே வந்தால்...எல்லோரும் காபி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.எங்களுக்கும் காபி வந்தது. காயத்ரி டீ குடிக்க லேட் ஆனது.அப்போதே வானம் சற்று மேக மூட்டமாக இருந்தது, அப்பாடா.....வண்டியில் ஏறி விட்டோம்.இப்போது டிரைவர் கொஞ்சம் பிரெண்ட் ஆகி விட்டார்.அங்கிருந்து ஹலேபீட் ..பயணம் அருகில் தான்...அரை மணியில் வந்து விட்டோம்.அருணாசலம் படத்தில் ரஜினி வந்து ஆடிய அந்த அழகிய கோவில் ......உள்ளே நுழைந்த பின் தான் அதன் பிரம்மாண்டம் புரிந்தது.மாக்கல் என்ற மென்மையான கற்களில் சிற்பியின் கற்பனை புகுந்து விளையாடி இருந்தது.இந்த கால அரசியல் வாதிகள் என்னமோ அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று பட்டியல் போடுகிறார்களே...நான் இதை செய்கிறேன் என்று சொல்லாமலே தான் பெயரை நிலை நிறுத்தி உள்ள அந்த ஹோய்ச்ள அரசனுக்கு அனந்த கோடி வணக்கங்கள்.கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் ..உழைப்பு  ஜக்கன்னாசார்யா 
என்ற சிற்பி தொடங்கியதாம்,..அவருடைய பேரன் காலத்தில் முடிந்திருக்கிறது...'கல்லிலே கலை  வண்ணம் கண்டான்'...கூத்தாடலாம் போல ஒரு சந்தோஷம்...இங்கேயும் சீக்கிரம் சீக்கிரம்...அவசரப் படுத்தினார்  மாமா ...என் மகள் கேமிராவை மூடவே இல்லை ...கண்கள் பெற்ற பயன் இது...கட்டாயம் ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய இடம்....அங்கே இருந்த அந்த பெரிய நந்தி ..வழக்கம் போல அங்கே தனிமை நாடி வரும் காதலர்கள்  தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தார்கள்..பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலைச் செல்வங்கள் .....இங்கேயும் காலை உணவுக்கு ஒரு பாடாவதி ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்.இப்போது பழகி விட்டோம் சோ..ஆட்டோ டிரைவரிடம் விசாரித்து ஒரு சுமாரான ஹோட்டலுக்குப் போனோம்.இரண்டு நாட்களுக்குப் பிறகு சற்றே வயிறு நிறைந்தது.காபி படு மோசம் எனவே நானும் டீக்கு மாறி விட்டேன்,,,,அடுத்த இலக்கு பேலூர்...இது ஹலேபீட் கோவிலை தூக்கிச் சாப்பிட்டு விடும்.விஷ்ணு வர்தனனும்  அவனது மனைவி நாட்டிய ராணி சாந்தலா  தேவியும்  இணைந்து  கலை தெய்வத்துக்கு செய்திருக்கும் ஆராதனை.உள்ளே ..ஒரு கைடு உதவியுடன் எல்லா நுணுக்கமான சிற்பங்களையும் பார்த்தோம்.தற்காலத்திய உடை வடிவங்கள் அணி மணிகள் கூந்தல் அலங்காரம் செருப்பு ..எல்லாவற்றையும் விட அந்த கல் வடிவங்களின் உடைகளில் இருந்த பூ வேலைப்பாடு...கிரேட்.அங்கே ஒரு விளக்குத் தூண் இருக்கிறது...அது ,மேடையில் முழுவதுமாக பதிக்கப் படவில்லை அதன் அடியில் ஒரு காகிதத்தை நுழைத்து எடுக்கலாமாம் மாமா  இங்கேயும் விரட்டினார்..ஆனால் நாங்கள் அசைய வில்லை நின்று நிதானமாக பார்த்து விட்டு வந்தோம்.மாமாவுக்கு கோபம்   ....எங்களுடன் பேச வில்லை.....என் மேல் ரொம்பவும் கோபம்....கல்லூரிக் காலத்துக்குப் பின் க்ரூப் சேர்த்துக் கொண்டு தலைமையை எதிர்த்து...கொஞ்சம் நன்றாகத்தான் இருந்தது...பின் சீட்டில் இருந்த க்ரூப் கொஞ்சம்கொஞ்சமாக எங்களுடன் சேர  ..சூப்பர்....மாமாவுக்குத் தலைவலி....சரி ஜூட் ..வண்டி நேர ஹொர நாடு அன்னபூர்னேச்வரி கோவில் தான் மதியம் சாப்பாடு அங்கே தான்...கதை விட ஆரம்பித்தார்....பின் சீட் அப்போதே சாப்பாட்டுக் கனவில் மூழ்கி விட்டது.வண்டி மேற்குத் தொடர்ச்சி  மலைத்தொடரின் உச்சியில் பயணித்தது..சற்றே மேடு பள்ளமான வளைந்த பாதை...சரியான சாப்பாடு வேறே இல்லையா வயிறு மக்கர் பண்ண ஆரம்பித்தது...ரெடி ஸ்டார்ட்  ...வாந்தி எடுக்க ஆரம்பித்தனர் பயணியர்..ஆரம்பித்து வைத்தது  அம்பிகா ...தொடர்ந்தது நான்...என் கணவர் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு இருந்தார்....இந்த தடையால் ...வண்டியின் வேகம் சற்று குறைய...மாமா...கண் சிவந்தார்....கொஞ்சம் நஞ்சம் வயிற்றில் இருந்ததும் காலி ஆனதினால்..வழியில் ஒரு சின்ன  கிராமத்தின் டீக் கடையில் வண்டி நின்றது....அங்கே டீ எஸ்டேட் காரர்களின் சின்ன டீ ஸ்டால்...பின் சீட்காரர்கள்...இறங்கி விட்டார்கள்...மீண்டும் ஒரு அரை மணி நேரம் தாமதம்...மாமா எங்களை சபிக்க ஆரம்பித்தார்..எப்படியோ இன்னிக்கு சாப்பாடு கிடைப்பது கஷ்டம்...தான்...பயமுறுத்தல்...மேற்குத் தொடர்ச்சி மழையின் உச்சியில் வந்து தங்கிய மேகக் கூட்டம் பொழிய ஆரம்பித்தது..கருமேகங்கள் யாரோ சொல்லி வைத்தது  போல ஊற்ற ஆரம்பித்தன.அந்த சிலீர் காற்று வயிறறுப் பிரட்டலை சரி செய்தது.சரியாக இரண்டு மணி அளவில் ஹொர நாடு.மாமா சாமி தரிசனத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை..நேராக உணவுக்கூடம் நோக்கி விரைந்தார்...நாங்கள் மட்டும் கோவில் உள்ளே சென்றோம்..தங்க மயமாக ஜொலித்துக் கொண்டு அன்னபூர்னேஸ்வரி.....அற்புதமான தரிசனம்..உணவு கிடைக்கா விட்டால் வெளியே பார்த்துக் கொள்ளலாம்...என்று தீர்மானித்தோம்..இதற்குள் எங்கள் கூட்டத்துடன் டிரைவர் சேர்ந்து கொண்டார்..சோ... மாமா பாடு திண்டாட்டம்...அனாலும் யாரையோ பார்த்துப்  பேசி உணவுக்கு ஏற்பாடு செய்து விட்டார்...ஒரு கரண்டி சாதம் ..கொஞ்சம் ரசம்..கொஞ்சம் புளித்த மோர்...(என் இப்படி ப்ரீ சாப்பாட்டுக்கு பறக்கிறார் என்று அப்புறம் தான் புரிந்தது..ஹோட்டல் பில் மிச்சம் பண்ணலாமே..)so .... நான் தீர்மானமாக சொல்லி விட்டேன் யார் எங்கே போனாலும் நான் கோவில் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்...அங்கிருந்து மழைச்சாரலில் நனைந்து கொண்டே பயணம் தொடர்ந்தது...shringeri நோக்கி .......

Sunday, November 14, 2010

மைசூர் மாளிகை இந்த முறை ரொம்பவும் ஈர்க்க வில்லை,,,,அப்போது தான் தசரா முடிந்து இருந்ததால் அதன் வாசம் இன்னும் மீதம் இருந்தது....அவசர அவசரமாக பார்த்தேன்...என்று   பேர் பண்ணி விட்டு  திப்புவின் மளிகை.....(முதல் தடவை பார்த்த போது அந்த திப்புவின் சமாதி...மனதில் ஆழமான சோகத்தை ஏற்படுத்தியது...மதம் தேசபக்திக்கு தடையாக இருக்க முடியாது என்பதை  அழமாக உணர்த்தியது)அங்கிருந்து.சங்கமம் போனோம் காவேரி இரண்டாகப் பிரிந்து இணையும் இடம் ஸ்ரீரங்கத்தை  நினைவு படுத்தியது..(நிறைய பேர் தங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு சடங்கு செய்து கொண்டு இருந்தார்கள் ..எனக்கு அம்மாவின் நினைவு வந்து விட்டது) அங்கிருந்து மேல் கோட்டை...
மேல் கோட்டை பற்றி நிறைய படித்து இருக்கிறேன்..எனவே ஒரு ஆவலுடன்  கோவிலுக்கு செல்ல விரும்பினேன்.எப்போதெல்லாம் நஞ்சன்கூட் செல்வோமோ அப்போதெல்லாம் என் விருப்பம் சொல்லப்படும்.உடனேயே நிராகரிக்கப் பட்டு விடும்.எனவே இந்த எதிர் பாராமல் செல்லப் பிள்ளையை தரிசிக்கும் பாக்கியம் என்னை மிகவும் ஆவலில் ஆழ்த்தியது. கர்நாடகாவில் தமிழக கட்டிடக் கலையின் இன்னுமொரு பரிமாணம்...இங்கும் முகலாய ஆட்சியாளர்களின் கைவண்ணம் ...சுற்றுச் சுவர்களில் இருக்கும் சிலைகள எல்லாம் கை இழந்தும்....   கால் இழந்தும்  ....  சின்னா பின்னமாகக் காட்சியளிக்கின்றன.உள்ளே செல்லப் பிள்ளையின் தரிசனம் ..வரலாறும் ஆன்மீகமும் கதை கதையாய் வருணித்த செல்லப் பிள்ளை மிகவும் அழகு தான்.(அது தான் அந்த இஸ்லாமிய இளவரசி மோகித்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளாள் ...பிறகு ஆச்சாரியார் அவர்கள் செல்லப் பிள்ளாய் ! வாரும் ! என்று அழைத்தப் போது அன்பில் கனிந்து உடன் வந்த அந்த அழகிய பிள்ளையைப் பிரிய முடியாமல் உடன் வந்து" துலுக்க நாச்சியாராக" வணக்கத்துக்கு உரிய தெய்வமாகிய கதை கண்ணுக்கு முன்னே படம் போல ஓடியது.)..இங்கேயும் அவசரம் தான்..ஆறு மணிக்கு முன்னே ஸ்ரவண பெலகோலா சென்று அடைய வேண்டும் என்று டிரைவர் வண்டியை விரட்டினார்.அதோ   ......பத்து மைலுக்கு முன்பே அந்த விஸ்வரூப உருவம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது..காலையில் இருந்து அவசர அவசரம்மாக எல்லா இடங்களிலும் ஓடி ஓடி தரிசித்த களைப்பு ...சரி ..கீழே இருந்தே ஒரு நமஸ்காரம் போட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்..ஆனால் என் மகள் மேலே போக வேண்டும் என்று சொன்னதினால் சரி என்று முடிவை மாற்றிக் கொண்டு ஏறலாம்..என்று முடிவு செய்தேன்...வழக்கம் போல செருப்பு போட வேண்டாம் என்று அறிவிப்பு வந்தது..நாங்களும் வழக்கம் போல காதில் போட்டுக் கொள்ளாமல் செருப்பு அணிந்தே போனோம்...நல்ல தூரம்.(செருப்பு இல்லாமல் நடக்கவே வர மாட்டேன் என்கிறது)அடிவாரத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தேன்...சற்று மனம் அதைரியப் பட்டது..சரி வந்து விட்டோம் ஏறி தான் பார்க்கலாமே.....துணிந்து விட்டேன்..முதலில் சற்று வேகமாக ஏறினேன்..ஆனால்.....கொஞ்ச தூரம் போனதும் வியர்வை ஊற்று உடலை நனைத்தது ..இதயம் ப்டபடவென்று அடித்துக் கொண்டது..குதித்துக் கொண்டு வாய் வழியே வெளியே வந்து விடும் போல துடித்தது.மேலே இருந்து இறங்குபவர்கள் "சீக்கிரம் ...போங்கள்..கோவில் மூடி விடு வார்கள் என்றதும் சரி கீழே இறங்கி விடலாம் என்று திரும்பினால் திரிசங்கு போல பாதியில் இருந்தேன்.என்ன ஆனாலும் சரி என்று வாயால்" புஸ்...புஸ் 'என்று மூச்சு இரைத்துக் கொண்டே மண்டபம் வரை சென்று விட்டேன் சரி வந்து விட்டோம் என்று சந்தோசப் பட்டால்...கொஞ்ச தூரம் பாறையில் சரிவில் ஏறிப் போனால் மீண்டும் பெரிய படிகள்..கண்களில் நீர் நிறைந்து விட்டது..சூரியன் காணமல் போய் விட்டான் இருள் சூழ ஆரம்பித்து விட்டது...சரி மகாவீரருக்கு என்னை ஆசீர்வதிக்க மனம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டே தட்டுத் தடுமாறி கோவில் படியில் கால் வைத்தேன்.என் கணவரும் மகளும் எனக்காக காது இருந்தார்கள்...மக வீரரின் விஸ்வரூப் தரிசனம் எனக்கும் கிடைத்து விட்டது...அவ்வளவு உயரத்தில் எங்கிருந்தோ வீசிய மென் காற்று வியர்வையில் நனைந்த என் உடலை சிலிர்க்கச் செய்தது...நம் நாட்டின் தெய்வ மனம் கமழும் இடங்களில் இப்படி ஏதோ யாருக்கும் புரியாத அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன..அவற்றைக் கண்டு பிடித்து அங்கே இப்படி அழகிய தெய்வீக மனம் கமழும் கோவில்களையும் கடடி வைத்துள்ள நம் முன்னோர்கள் உண்மையிலே பெரிய ஆச்சரியக் குறிக்குள் உள்ளவர்கள் தான்.......!

Tuesday, November 9, 2010

இளங்காலை ....சிலு சிலு வென்று மென் காற்று...வண்டி நின்ற இடமோ பழைய ஆற்றுப் பாதை.முதலில் இறங்கிய எங்கள் டூர் கைடு வெகு வேகமாக நீச்சல் உடைக்கு மாற்றிக்கொண்டார்.(என்ன ஒரு பெரிய விஷயம்...தடவென்று வேஷ்டி சட்டை களைந்தார்.ஒரு துண்டை கட்டிக் கொண்டு நாங்கள் வருகிறோமா..இல்லையா...என்று கூட பார்க்காமல் ஆற்றை நோக்கி நடந்தார்.)எனக்கு திக் என்றது.எப்படி குளித்து உடைமாற்றுவது...?என் மகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது...நான் இங்கே குளிக்கமாட்டேன்...எங்கே டிரஸ் மாற்றுவது...நான் உடனே மாமா...மாமா...என்று கூவிக்கொண்டே பின் தொடர்ந்தேன் ...என் மகளின் சந்தேகங்களுக்கு உடனே பதில் வந்தது ...அதோ அங்கே நிறைய இடம் இருக்கிறதே....சற்று தள்ளி நிறைய பாத்ரூம் கடடி விட்டிருந்தார்கள்...(இதற்குள் மாமாவின் குளியல்...மற்றும் காலை  கடன்கள் முடிந்து பட்டை அடித்து ரெடி ஆகி இருந்தார்...என்ன போலாமா....?மாமாவின் அடுத்த கேள்வி..எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது...எங்கும்அழுக்கு  குப்பை கீழே அங்கேயே துப்பி வைத்திருந்தார்கள்...நாங்கள் இன்னும் பல் தேய்க்ககூட ஆரம்பிக்க வில்லை .என் கணவரைக் கண்ணிலேயே காணோம்....சற்று தள்ளி கை கடடி வேடிக்கை பார்த்துக்  கொண்டு இருந்தார்.சரி  ....நின்று கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று என் மகளை கரையில் காவலுக்கு வைத்து விட்டு விடு விடு வென்று தண்ணீரில் இறங்கினேன்..தண்ணீரின் மேலே படலமாக பனி மூட்டம் நகர்ந்து கொண்டு இருந்தது.(வேலூரில் வாய்காலில் மார்கழி மாதம் பார்த்து ரசித்தது மீண்டும் நினைவுக்கு வந்தது.)
இப்போது ரசிக்கும் மன நிலை இல்லை ஒரு முழுக்கு .......மனதில் புனித இடம் என்ற ஒரு பக்தியே வரவில்லை...எங்கும் அசுத்தம்...அழுக்கு....குளித்தோம் என்று பேர் பண்ணி விட்டு உடை மாற்றச் சென்றேன்...அங்கே நான்கு பக்கம் தட்டி அடித்து டிரெஸ்ஸிங் ரூம் என்று இரண்டு ருபாய் வாங்கி விட்டான்...(நஞ்சன்கூட் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் அந்த கோவில் அதன்தங்க நிறம்..... சிலைகள் என்னை மிகவும் ஈர்க்கும் நீண்ட பயணத்திற்குப் பின் கூட சுறுசுறுப்பாக இறங்கி ஓடுவேன்.இப்போது அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை..... ஒரே கோபம்...)ஏதோ காமா சோமாவென்று புடவையைச் சுற்றிக் கொண்டு கடவுளை தரிசிக்கப் போனோம்..நல்ல தரிசனம்..(இங்கும் திருப்பதி போல தள்ள ஆரம்பித்து விட்டார்கள்)திருப்தி அடையாமல் வெளியே வந்தோம் பிரகாரம் சுற்றி வந்தோம் . அம்மன் சந்நிதி..கும்பல் இல்லை அர்ச்சகரிடம் பேர் நக்ஷத்திரம் சொல்லி அர்ச்சனை....செய்யச் சொன்னோம்...மனம் மிகவும் அமைதியாய் இருந்தது.அம்மன் சந்நிதிக்குப் பக்கத்திலே ஒரு மரகத லிங்கம் இருக்கிறது.அதை கோவிலுக்குக் காணிக்கை ஆக  கொடுத்தது திப்பு சுல்தான்.அவனுடைய பட்டத்து யானையின் கண் நோய் நீக்கியதற்காக  அம்மனுக்கு அவன் செய்த நன்றி காணிக்கை.(இதை பார்க்கும் போது பக்தி ,நம்பிக்கை,நன்றி உணர்ச்சி இவை எதுவுமே மதம் சார்ந்தது இல்லை என்ற உண்மை உரைத்தது.பின்...ஏன்...இப்போது இத்தனை மதக் கலவரங்கள்...புரியாத புதிர் தான்..)
கோவில் விட்டு வெளியே வரும் போது பிரகாரங்களில் அற்புதமான் சிலா ரூபங்கள்...கதைகள் கன்னட எழுத்துகளில் இருந்ததால் புரியவில்லை...ஒரு சில விக்ரகங்கள் கதை தெரிந்ததால்....என்ன என்று தெரிந்தன..இப்போது நான் டூரிஸ்ட் கைடு ஆகி விட்டேன்...இப்போதும் எங்கள் வண்டி டிரைவர் எங்களுடன் வரவில்லை ஏனோ அவர் ஒட்டாமல் இருந்தார்....வெளியே வந்த பிறகு ராகவேந்திரர் பிருந்தாவனதிற்குப் போனோம் .இங்கே தான் சுயம்புவாக ராகவேந்திரர் சிலை இருக்கிறது.அவரையும் தரிசித்து விட்டு வண்டி நோக்கி திரும்பினோம்...அங்கே இருந்த ஒரு டீக் கடையில் காபி என்ற பெயரில் ஏதோ குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் விரைந்த எங்கள் வண்டி நின்ற இடம் சாமுண்டி மலை..அப்போது தான் தசரா முடிந்து இருந்ததால் அம்மன் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள்.(இங்கே நாங்கள் சாப்பிட்ட காலை உணவு.....அப்பப்பா...படு கேவலமாக இருந்தது....ஐயோ  இன்னும் நான்கு நாட்கள் எப்படி சாப்பிடப் போகிறோம் என்று பயம் வந்து விட்டது..உடன் வந்தவர்களும் இதே பயத்தை வெளிப் படுத்தியதால் இனி நாங்கள் சொல்லும் ஹோட்டலுக்குத் தான் போக வேண்டும் என்று டிரைவரை சரிக் கடடி வைத்தோம்.இதற்குள் டிரைவர் கொஞ்சம் பழகஆரம்பித்து இருந்தார்.)அடுத்த இலக்கு மைசூர் பாலஸ்.......(தொடரும்)

Sunday, November 7, 2010

இனிய பயணம்
எதிர் பாராமல் ஒரு பயணம் வாய்த்தது.கர்நாடகாவின் பழமையும் புதுமையும் கலந்த ஒரு புனிதப் பயணம்.எங்கள் ஊரின் ஒரு பயண ஒருங்கைமைப்பாளர் என்னிடமும் என் கணவரிடமும் மாற்றி மாற்றிப் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்.நான் தான் "சரி" என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து என் prestige காப்பற்றப் படுவதற்காக என்னவரும் தலையாட்ட இனிய பயணம் உறுதி படுத்தப் பட்டது.ஆனால் ஒரு தயக்கம் ....ஒரு சந்தேகம்...ஒரு வாரம் வேலை,என் வகுப்புகள் , விட்டு விட்டு  எப்படி? .......சரி ...கால் வைத்தாகி விட்டது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் ..என்று ஏற்பாடுகளில் முனைந்தோம்.'.கோவில் கோவிலாக போகப் போகிறோமா ?'மகளின் ஆரம்பகால மறுப்புகளை ஒரு வழியாக பேசி சரி செய்து விட்டேன்.
ஒரு செவ்வாய்கிழமை ..இரவு பத்து மணிக்கு ..அந்த tempo traveller பன்னிரெண்டு பயணிகளுடன் பயணம் துவங்கியது.ஒருவரை ஒருவர் அறியாத உடன் பயணிகள் ....பாவம் அந்தக் கூட்டத்தில் என் மகள் மட்டும் தான் இளையவள்..பின் சீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டாள்..அதிலேயே அவள் கோபம் வெளிப்பட்டது...அவள் என்ன சொன்னாலும் தலையாட்டிவிட்டு நான் டிரைவர் இருக்கைக்குப் பின்னே அமர்ந்து கொண்டேன்.
ஆரம்பமே சிறு தடங்கலுடன் தான் இருந்தது.அந்த வண்டியின் permit sheet காணவில்லை என்று காந்திபுரத்தில் நிறுத்தி தேடல் துவங்கியது.டிரைவர் என்னவோ எல்லா இடங்களிலும் தேடி விட்டு இல்லை என்று சொல்லி விட்டார்.வண்டி நின்ற இடம் காந்திபுரம் பிள்ளையார் கோவில் ....என்னப்பா பிள்ளையாரப்பா ....இது என்னடா சோதனை என்று நினைத்துக் கொண்டு தூக்கமும் விழிப்புமாக ..காத்துக் கொண்டு....நல்ல வேளை ..வண்டி உரிமையாளர் வந்தார்...அவரிடம் டூர் நடத்தும் மாமா "என்னப்பா  இது புது பிரச்சனை " கோபமே இல்லாமல் கேட்டார் வண்டி உரிமையாளர் ஏதோ ஜி  பூம்பா மாதிரி எதற்குள்ளேயோ கை விட்டு தேடினார் கிடைத்து விட்டது அந்த பேப்பர் ..சரி போலாம் ரைட் ....வண்டி புறப்பட்டு விட்டது.....மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி விரைந்தது அந்த சின்ன வண்டி....சிலு சிலுவென்று கோவையின் குளிர் காற்று முகத்தில் மோத ஆரம்பித்தது.இரவின் மெல்லிய தாலாட்டு ...(ஹரிவம்ஸ் ராய் பச்சனின் ஒரு கவிதையில் படித்திருக்கிறேன் ..யாரும் இல்லா இரவில் வானப் பெண் தாலாட்டுப் பாடுவாளாம் )அந்த அமைதியான இரவில் கண்களை இழுத்து மூட வைத்தன.வசதியாக கால்களை வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல தூக்க தேவதையின் அணைப்புக்குள் புக ஆரம்பித்தேன்.
"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..."பெரும் ஓசையுடன் அந்த  vedio பிளேயர் அலற ஆரம்பித்தது. சரியான எரிச்சல்...கண்களுக்கு எதிரே பயங்கரமான கிராபிக்ஸ் கலவையுடன் ஆடல் பாடல் ...அவ்வளவு  தான் ஆனந்தமான தூக்கம் தொலைந்து போய் விட்டது.சரி ....வேடிக்கை பார்க்கலாம் என்று ஜன்னல் திறந்து இரவின் அழகை பார்க்க ஆரம்பித்தேன்....விர் ...விர்...என்று விரையும் பேருந்துகளும் லாரிகளும் அமைதியான இரவுப் பெண்ணை துன்புறுத்திக் கொண்டு இருந்தன.இப்போது அந்த வீடியோ காட்சி கண்களுக்குப் பழகி விட்டது...நாள் பூராவும் வேலைசெய்த களைப்பு கண்களை அழுத்தியது.என்னை அறியாமல் நித்திரைப் பெண்ணின் பிடிக்குள் மாட்டிக்கொண்டேன்.திடீரென்று வண்டி நின்றது...ஓடிக் கொண்டிருந்த போது தாலாட்டிய மெல்லிய காற்றின் வேகம் குறைந்த போது தானாகவே விழிப்பு வந்தது.பலவந்தமாக இமை பிரித்துப் பார்த்தபோது நீண்ட வரிசையின் கடைசியில் எங்கள் வண்டி நின்று கொண்டு இருந்தது.பண்ணாரியம்மன் கோயில் வாசலில் வண்டி நின்று கொண்டு இருந்தது.எல்லோரும் இறங்கினோம்.காட்டு வழிப் பாதையில் பயணிப்போருக்கு வழித் துணையாய் உடன் வரும் எல்லை தெய்வம் .செருப்பு போட வேண்டாம் ...மாமாவின் தெளிவான அறிவுறுத்தலை காதில் வாங்காமல் செருப்புக் காலுடன் கோவில் எல்லையில் பிரவேசித்தோம்.எங்கு பார்த்தாலும் அசுத்தம்.குப்பை ...தண்ணீர் தேங்கிக் கிடந்தது...சிறிது தயக்கத்துடனே நடந்தோம்....காலை தரிசனத்திற்காக இரவே வந்து கோவில் நடையில் படுத்திருப்போர்....அப்போது சுருதி பிசகாமல் பழைய கன்னடம் தமிழ் கலந்த ஏதோ ஒரு பாட்டு ஒலித்தது .அங்கு இருந்த கும்பலில் தூக்கம் வராத அருகில் உள்ள காட்டுவாசிப் பெண்கள் ஏதோ ஒரு அமானுஷ்யமான குரலில் பாடிக் கொண்டு இருந்தார்கள்.சற்றே மனம் சிலிர்த்தது....அந்த நடுஇரவில் ....உரத்த குரலில்..  எனக்கும் உனக்கும் புரிந்தால் போதும் என்பது போல் அம்மன் சந்நிதியின் முன் பாடிக் கொண்டு இருந்தார்கள்.கூட்டம் இல்லாமல் அம்மனை பூட்டிய கம்பி வேலியின் இடையே தரிசித்தோம்..அம்மனும் எங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தாற்போல் இருந்தது.பிறகு எதிரில் இருந்த குண்டம் ,பலி கொடுக்கும் இடம் எல்லாம் பார்த்து வண்டிக்குத் திரும்பும் போது எங்கள் வண்டியின் பின்னே வரிசை நீண்டு இருந்தது.அது வரை மௌனம் காத்த டிரைவர் வண்டி கிளம்ப இன்னும்இரண்டு மணி நேரம் ஆகும் மேலே மலைப் பாதையில்ஏதோ விபத்து என்று பொதுஅறிவிப்பு செய்தார்.நடு இரவில் ...வண்டி விட்டு இறங்கி டீக் கடையை தேடினோம்.ஒருகடையில் டீ என்ற பெயரில் சற்றே ஆறியவெந்நீர் கிடைத்தது.சரி கிடைத்த வரை போதும் என்று அதையும் விடாமல் குடித்து விட்டு வண்டி திரும்பினோம்.அப்போது  சும்மா இல்லாமல் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.டூர் ப்ரோக்ராம் பேப்பர் பார்த்து எனக்கு தமிழில் எழுதிக் கொடுங்கள் என்றார்.ஒரு சிறு நட்புடன் எங்கள் பேச்சு தொடர்ந்தது.என் மகளைப் பார்த்து இந்த cd  உங்களுக்குப் போர் அடிக்கும் வேறு போடுகிறேன்.என்றார்.அப்போது மேலே மலைப்பாதையில் இருந்து ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு வந்தது.ஒருவர் உயிர் இழந்து விட்டார் என்றும் இன்னொருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள்.கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம்சரியாகி விட்டது.எங்கள் வண்டியின் பயணமும் தொடர்ந்தது.தூக்கம் தொலைந்து போனது .மலைப் பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் விரைந்து ஒட்டிய டிரைவர் விபத்துக்கு உள்ளான வண்டியைக் காட்டினார்.மலைப் பாதை பயணத்தில் இருளில் நின்றிந்த யானைகள் கண்ணில் பட்டன.கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தூக்கம்...விடியும் போது வண்டி நின்ற இடம் நஞ்சன்கூட் ...கபினி ஆற்றின் கரையில்....(தொடரும்)