Wednesday, January 27, 2010

இதுவும் என்னை பாதித்த கவிதை தான்
அவன் பெயர் வெளிச்சம்
அவன் பெயர் அன்பு
அவன் பெயர் சக்தி
அவன் என் சொல்லின்
துணைவன்.......
 அவன் யார்........

அவன் ஆணையிட்டால்..
இரவும் பகலாகும்.
பகலும் இரவாகும்.
அவன் இச்சைப்படித்தான்
நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.

அவன் ஏற்பாடு....
பருவ மற்றம்.
அவன் தான் ....
காற்றின் திசை மாற்றி.
அவன் நினைத்தால் போதும்
பூமிப்பெண் பச்சை பட்டு உடுப்பாள்.


அவன் தலையிட்டால்
கடல் நீர் மேகமாகும்.
மேகமும் மழை நீராகும்.

உனக்குத் தெரியுமா
அவன் தீர்மானிக்கும் வரை தான்
மூச்சுக்காற்றும்
உள்ளே போய் வெளியே வரும்.
அப்போது....
நம் நாமாக இருப்போம்.
அவன் முடிவு செய்தால்
நாம் அதுவகிவிடுவோம்.
மரணம் என்பது
பின் மண்டையில் உட்கார்ந்து
எட்டிப் பார்த்தாலும்
அவன் நினைத்தால்
எதுவும் நடக்கும்
எதுவும் நம் கையில் இல்லை......

நீ செய்யும் செயல்கள்
நற்செயலாயின்.....
நீ ஆசீர்வதிக்கப் படுவாய்.
நீ மனிதனாகப்
பிறந்துவிட்டாய்.
இது நீ எப்படிப்பட்டவன்
என்பதற்கான தேர்வு.
மனிதா.......
நீ ஜெயிக்கப் போகிறாயா...?
தோற்கப் போகிறாயா...?

மனிதனே.....
கடவுள் உன்னை உனக்கு உணர்த்துவான்.
மூத்தோர்,முன்னோர்,  கடவுள்
இவர்களிடம் உனக்கு
அன்பு,மரியாதை பக்தி வேண்டும்.
"நான்" இதை விட்டுவிடு.
கடவுள் என்ற மதம்
சொல்லும் வழி
அதுவே
நீ செல்லும் வழி

खुदा   என்ற உருதுக் கவிதை என்னை மிகவும் பாதித்ததுகவிஞரின் கற்பனையும் என் மன சிதறல்களும் இணைந்துள்ளன.

Monday, January 18, 2010

என்னை பாதித்த கவிதை
पुकार
அழைப்பு
திருப்தி என்பதை அறியாத
தாகம்,கவலை,குழப்பம்
நிறைவற்ற மனதுடன்
எப்போதுமே ஒரு
விலக்கப்பட்ட பார்வையுடன்
கம்மிய குரலுடன்
என் மனதில் எழும்
வேதனைக் குரல்.....
ஓங்கி ஒலிக்கிறது
என்னை யாரும் நேசிக்க வில்லை............
கடலுடன் அலைகளின்
த்வந்த யுத்தம்...
கரம் நீட்டி வான் காதலனைத்
தழுவத் துடிக்கும்
அலைக் காதலி,
நீண்டு பரந்துவிரிந்த
தெறித்து விளையாடும்
ஒவ்வொருத் துளித் தண்ணீரும்
வேதனைக் குரல் எழுப்புகிறது......
என்னை யாரும் நேசிக்க வில்லை............

பூமி அன்னையின் கருணைக் கண்கள்
ஏன் என்னைப் பார்க்க வில்லை ?
நிலமகளின் ஒரு கீற்றுப் புன்னகை
என் வாழ்வின் செயல்பாடுகளை
மென்மையாக ,பிரகாசமாக,
வெளிச்சப்புள்ளிகளாய் மாற்றிவிடும்....
ஆனால்....
அவளும் தான் ஓலமிடுகிறாள்
யாரும் என்னை நேசிக்க வில்லை.........

காலைபனியின்  புதியராகம்.
இசைபடும் இனியவேளை.
ஆனால்.....கூடவே
ஒலிக்கும் அத்ருப்தியின்
அபஸ்வரம்........
எங்கும் வஞ்சனை,வேதனை....
துன்பம்,பேராசை....
இருளரக்கன் மெல்ல பூமிப்பெண்ணை
விழுங்கத் தொடங்குகிறான்.
அப்போதும் மெல்லிய விசும்பலுடன்
ஓர் ஓலம்......கேட்கிறது.
யாரும் என்னை நேசிக்க வில்லை........

இருள் அழகியின் நெற்றியில்
பொட்டிடும் நிலா மகள்.
அவளிடம் இருந்து விழாதா?
சுவாதி நட்சத்திரத் துளி.....
என் இதயம் என்னும் முத்துசிப்பியில்
முளைத்திடுமே
வெண் முத்துக் குட்டி.....
ஆனால் அதோ கேட்கிறதே ஓலம்
யாரும் என்னை நேசிக்கவில்லை.......

அங்கே பார் மொட்டுக்களின்
சுமைதாங்கி ..இளம் தளிர்க் கரங்கள்
மெல்லிய கிளை பரப்பி
மலர்க் கூட்டம் சுமக்கும் மரக் கூட்டம்.
இனிய சுவாசத்தால் மணம்
நிறைக்கும் மலர்மொட்டுக்கள்.
ஆனால்.....
அங்கேயும் விஷ முட்கள் ......
பட்டு மலர் இதழ்கள்
காயப் படுத்தப் படுகின்றன.
என் காதில் ஒலிக்கிறதே...
அதே ஓலம்...அதே குரல்..
என்னை யாரும் நேசிக்கவில்லை..........

இறைவன் சிரிக்கிறான்....
அடே...முட்டாளே.....
நேசம் ,பாசம். இரண்டும்
கடைச் சரக்கல்ல...
எங்கும் கிடைக்காது.....
அதை நாம் தான் தரவேண்டும்....
கண்ணீர் துளிகள் அடகு வைக்கப்பட்டால்தான்
உலகம் கடனாகத் தரும்.
வட்டியுடன் நீ தான் அதை திருப்பித்
தர வேண்டும்....
இதை நீ உணர்ந்தால்....
எங்கும் எப்போதும் உன் ஓலம் ஒலிக்காது.
யாரும் என்னை நேசிக்க வில்லை.......

Sunday, January 17, 2010

மதுரை சித்தப்பா
அம்மாவின் தங்கையின் கணவர் என்ற உறவு தான் என்றாலும் அப்பா இளவல் என்று சொல்லி பேசியதாலும் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் .மதுரையின் திருவிழா அறிமுகமானது அவரால் தான்.மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் பாரதியார் பயன் படுத்திய நாற்காலி,அவர் திருத்திய கட்டுரை நோட்டுக்களை காண்பித்த சித்தப்பா என் மனதில் ஹீரோ ஆனார்.தமிழை " இருந்தமிழே .....அருந்தமிழே..செந்தமிழே..விதம் விதமாக அடைமொழியின் வாயிலாக அறிமுகப்படுத்தி தமிழ் மேல் ஒரு தணியாத தாகத்தை ஏற்படுத்தியவர்.
நா பா வின் நண்பர் என்ற செய்தி இன்னும் அவரை என் மனதில் உயரத் தூக்கி வைத்தது.அவர் எம்.ஏ. தேர்வுக்கு தயார் செய்த சிலப்பதிகார உரை என்னை மதுரைக் காண்டத்தைப் படிக்கத் தூண்டியது.
சித்தப்பா என்னை தினமணி பிரஸ் இல் என் 11th தேர்வு முடிவுகளை அச்சாகும் போதே பார்த்து மலைக்க வைத்தார்.அதன் பலனாக அப்பாவிடம் எனக்கு transister பரிசு கிடைத்தது.
அவனியாபுரம் வீட்டில் இருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு நடத்தியே கூடி வந்து என்னை மதுரையின் காதலி ஆகினார்..கோவிலின் உள்ளே தமிழ் சங்கம் நடக்கும் இடத்தைக் காட்டினார்.அப்போது என் கனவுகள் பாண்டியனின் சங்கம் கண்ணுக்குத் தெரிந்தது.
சித்தப்பாவிடம் நான் மலைத்த இன்னொரு விஷயம் அவர் ஒரு அரசியல் வாதி.  தி.மு.க.பேச்சாளர்.நாத்திகம் பேசுவார்.தோளில் துண்டுடன் அவர் பேசும் தமிழ் என்னைக் கட்டி போடும்.
அப்படி நான் பார்த்து வியந்த சித்தப்பா இப்போது வயோதிகம் ,நோய்.ஆகிய காரணங்களால் தளர்ந்து நேற்று என் கைகளை அழுந்த பிடித்த போது மனம் கலங்கி விட்டேன்.காலம் எவ்வளவு கொடூரமானது.மனிதர்களை எப்படி மாற்றிப் போடுகிறது?இது புரியாமல் நாம் இன்னும் குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.

Monday, January 11, 2010

இன்னொரு இழப்பு
சென்ற வியாழன் .ஒரு கருப்பு நாள் சென்ற தலைமுறையின் இன்னொரு கிளை காணாமல் போய் விட்டது.என் தாயின் சகோதரி....... என் சித்தி..... இவ்வுலக வாழ்க்கை விட்டு சகோதரியுடன் இணைந்தார்.சித்தி....எல்லோருக்கும் போல என் நினைவில் நல்ல நிகழ்வுகள் ஒன்றும் பதிவாகவில்லை.அப்படி ....ஒரு ...நெருக்கமான தொடர்பும் இல்லை..இருந்தும்.....இழப்பு மனதில் ஒரு பாரமாக தங்கிக் கொண்டு விட்டது.இனி தாத்தா வீட்டுத் தொடர்பு என்பது மாமா மட்டும் தான்.இளமையில்  மாமாவுடன் கழித்த நாட்கள் அசை போட்டுப் பார்க்கும் அளவுக்கு ....சுவாரஸ்யமான ..நாட்கள்  தான்.

Wednesday, January 6, 2010

இன்னொரு பொங்கலின் வருகை
இதோ ....வந்து கொண்டே இருக்கிறது  இன்னொரு தை மாதம்.....ஆனால் என்ன கோலம் போடப்போகிறாய் என்று விசாரிக்க அம்மா இல்லை .கலர் கோலப்பொடி வாங்கி விட்டாயா?என்று கேட்கவும் யாரும் இல்லை.ஒரு சோம்பலான சோகமான பொங்கல் வந்து கொண்டே இருக்கிறது.ஆனாலும் நான் மனதளவில் என்னை தயார் படுத்திக் கொண்டு விட்டேன்.ஏதோ இனிப்பில்லாத பொங்கலை வரவேற்கத் தான் போகிறேன்.
தெருவெங்கும்  கோலம் போடும் ஆர்வம் இல்லை.இந்த தடவை தினமலர் கோலப்போட்டிக்குயாரும் வரவும் இல்லை.
எனக்கும் புதிய கற்பனைகள் வறண்டு போன மாதிரி இருக்கிறது.உடம்பு வேறு சரியில்லை..மார்கழிக் கோலமே மிஸ்ஸிங்.
ரமா அன்று சொன்னது போல இத்தனை வயதுக்குப் பிறகும் பெற்றோரின் பிரிவு இப்படி வாட்டும் போது சிறு வயதில் இழப்பவர்கள் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள்.
அதனால் தான் "தந்தை தாய் இருந்தால் " என்ற பாட்டைக்கேட்கும் போதெல்லாம் துக்கம் அடைக்கிறது.
சரி வரும் பொங்கலை ஏன் வரவேற்காமல் இருக்க வேண்டும்.
தைமகளே வா.....
நன்மைகள் ,மகிழ்ச்சி
நிறைக்க வா.......
எல்லோரும் மகிழ்ந்து
கொண்டாட வா  மகளே வா.....
சந்தோஷங்கள்,வாழ்க்கையின்
அத்தியாயங்கள்.மாற்றங்கள்
மகிழ்ச்சியின் ஊற்றுக்களை
பொங்கச் செய்யத்
தை மகளே வா..........
உன் வரவு நல வரவாகட்டும்.

Friday, January 1, 2010

எது விடுதலை
வழக்கம் போல ஒரு மார்கழி மாதத்து பகல்.வேலை முடிந்தது.புதிதாக வந்த வார இதழின் புது மணம் நாசியின் உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி விட்டன.வெது வெதுப்பான இளம் வெயில் வா... வா... என்று அழைத்தது.செண்பக மரத்தின் தண்டில் ஏதோ அசைவு தெரிந்ததும் அங்கே கவனம் சென்றது.என்ன இது புதியதாக இருக்கிறதே! சின்ன ஆச்சரியத்துடன் பார்வை படர்ந்தது.ரகசியமான சந்தோஷம்.ஒரு சின்ன லோலாக்குப் போலே செண்பக மரத் தண்டில் ஏதோ ஊஞ்சலாடிக்கொண்டு இருந்தது.பக்கத்தில் போய் கண்கள் சுருக்கிப் பார்த்தேன்.அடடா   ஒரு கூட்டுப்புழுவின் பரிணாம வளர்ச்சி.உள்ளுக்குள் ஏதோ அசைவது தெரிந்தது.புது புத்தகத்தின் ஈர்ப்பு கொஞ்சம் குறைய....உள்ளே போய் சேர் கொண்டு வந்தேன்.பார்வை அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.அந்த ஊசலாடும்
வடிவம் அறிமுகமான வடிவம்.நெற்றியைச் சுருக்கி யோசித்தேன்.ஓ.....அம்மாவின் கல்யாண  போட்டோவில் காதுக்கு அருகில் ரகசியம் பேசிய லோலாக்கு டிசைன் தான்.பெரிய கண்டுபிடிப்பு .என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.அந்த கூடு இன்னும் வேகமாக அசைந்தது.நுனியில் இப்போது ஒரு விரிசல்.பார்வை விலக்காமல்கவனித்தேன்.ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி முட்டி மோதி வெளியே வந்தது.அடடா...என்னிடம் கேமரா இல்லையே!
        நல்லகருப்பு சிறகுகள்.வெளிர் மஞ்சளும் பச்சையும் கலந்த புள்ளிகள்.வெளியே வந்த அந்த சின்ன உயிருக்கும் இந்த புற உலகம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.கொழுக் மொழுக் என்று உள்ளே போன நாமா இப்படி ? என்று நினைத்தது போலும்.ஒரு நிமிடம் சும்மாவே இருந்தது,பிறகு மெல்ல சிறகை ஆட்டிப் பார்த்தது.அப்படியே மெல்ல மேலே எழும்பியது.பூச்சிக்கும்கொஞ்சம் பயம் போலே ,சிறகை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டது,இப்போது கீழே வந்தது.மீண்டும் ஒரு முயற்சி.இப்போது இன்னும் கொஞ்சம் மேலே .....அப்பாடி .....ஒரு வழியாக பறக்க ஆரம்பித்து விட்டது.பக்கத்தில் வாடாமல்லி மொட்டுக்கள் பச்சையும் வாடாமல்லி கலருமாக பட்டுப்பூச்சியை அழைத்தன.பூவின் மீது பட்டும் படாமல் அமர்ந்தது.வாய்ப்பகுதியில் இருந்து ஒரு சுருள் நீண்டது.தேன்சுவை உணர்ந்த அந்த பூச்சி மலருக்கு மலர் தாவி பிறவியை ரசித்தது.சுற்றிலும் மலர்ச் செடிகள் .பூச்சி பறந்தது.என் கவனமும் சிதறியது.அப்போது ஒரு தேன் சிட்டு தான் கூட்டை விட்டு எட்டிப் பார்த்து ட்விக் ட்விக் என்று கொஞ்சியது.ஒரு நிமிஷம் தான் பூவின் தேனை ரசித்துப் பறந்த அந்த பட்டுப்பூச்சி தேன் சிட்டின் வயிற்றுக்குள்..ஐயோ....மனம் பதறியது.என்ன உலகமடா இது.கூட்டுப்புழு பட்டுப் பூச்சி ஆனது விடுதலையா...இல்லை என் பிறந்தோம் என்று உணரும் முன்னே உலகை விட்டுப் போனது விடுதலையா....யோசித்தேன்....விடை கிடைக்கவில்லை.