Sunday, February 7, 2010

ஈஷாவில் என் அனுபவம்

நேற்று ரமாவுடன் ஈஷா சென்று இருந்தேன்.சுதா ரகுநாதன் கச்சேரி .இது வரை நேரில் கேட்டதில்லை.ரமாவுடன் சென்றது இரு புது அனுபவம்.
சுதா ஆரம்பிக்கும் போது சற்று சுருதி சேராதது போலத் தான் இருந்தது. ஸ்ரீ விக்னராஜம் பஜே.. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாட்டில் விநாயகப்பெருமானை அழகாக பல்லக்கில் ஏற்றி குதித்து கும்மாளமிட்டு கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.இந்த பாட்டை எத்தனையோ முறை கேசட்டிலும் ரேடியோவிலும் கேட்டு இருக்கிறேன்.நேரில் கேட்டது ஒரு புது அனுபவம் தான்.
அப்புறம் என் நினைவுப் பெட்டகத்தை உசுப்பி விட்டது "இடது பதம் தூக்கி"பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்.இதில் சிறப்பு   என்ன தெரியுமா ? நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டபிறகு முதல் முதலாக மேடையேறி ஆடிய பாடல்.நான் பத்தாவது படித்துக்கொண்டு இருந்தேன்.பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா .நான் தான் ஆஸ்தான நர்த்தகி. அப்போது கேசெட் கிடையாது.அம்மா தான் பாடுவார்கள்.ஒவ்வொரு தடவையும் ஆடிப் பழகும் போதும் பாடிப்பாடி அம்மாவுக்கு தொண்டை கட்டி விட்டது.அப்போது எங்கள் வீட்டில் பட்டுப் புடவை கிடையாது.யாரிடமோ இரவல் வாங்கிய ஒரு நீல வண்ணப் புடவை.முதல் முதலாக எனக்கு blouse  தைக்கப்பட்டது.அம்மாவே ஸ்கூலில் இருந்த தையல் மிசினில் தைத்தார்கள்.
எப்படியோ கச்சம் வைத்து கட்டிவிட்டார்கள்.காலில் அணிய சலங்கையும் இல்லை ,கொலுசும் இல்லை.ஏன்/? குஞ்சலம் கூட யாரோ தந்தது தான் .ஆனால் ஏன் முதல் மேடையேற்றம் இன்னும் பசுமையாக ஏன் நினைவில் எட்டிப் பார்கிறது.
எங்கிருந்தோ எங்கோ போய் விட்டேன் இல்லை.சரி சரி இப்போது நிகழ் காலத்திற்கு வருகிறேன்.
ஈஷாவில் பக்தர்கள் எல்லோரும் இசையின் நுணுக்கங்கள் புரிந்ததோ இல்லையோ மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல் தன்னை மறந்து ஈடுபட்டார்கள்.என்னால் தான் அந்த மயக்கத்தை ஜீரணிக்க முடியவில்லை.ஒரு வேளை ,நான் வளர்ந்த விதம் அப்படியோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் கச்சேரி முடிந்த பிறகு ஏன் மனதிலும் ஒரு அதிர்வலை வீசிக்கொண்டு இருந்தது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம்.நல்ல அனுபவம் தான்.

2 comments:

  1. ஆம். பழைய விஷயங்கள் மட்டும் மறப்பதே இல்லை. சில பாடல்கள் சில நினைவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. உனக்கு நினைவிருக்கிறதா, என் தோழி அப்சரை? என்மேல் அவளுக்கிருந்த அன்பை நினைத்தால் இப்போது கூடகண்ணில் நீர் நிறைகிறது.
    எங்கள் கல்லூரியில் அப்போது தான் கட்டிடங்கள் ஆகிக்கொண்டிருந்தன. அவள் தமிழ் major. நான் English. இருவரும் விடுதியில் தான் தங்கியிருந்தோம். ஒரு நாள் அவள் முதலில் சாப்பிட்டு விட்டு படிக்கப்போய் விட்டாள். மறு நாள் ஆங்கிலத்தேர்வு. அவள் அதில் கொஞ்சம் weak. நான் தான் அவளுக்கு விளக்குவது வழக்கம். அன்று நான் சிறிது நேரம் கழித்து அவள் இருந்த இடத்திற்கே படிக்கச்சென்றேன். அவள் சும்மாவே உட்கார்ந்து கொண்டிருந்தாள். 'என் படிக்கத்தொடங்கவில்லை?' என்று கேட்டேன். 'குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் ; பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வரவேண்டும்' என்று பாடினாள் .
    அப்போது சாதாரணமாகத்தேன் பட்ட அந்த வரிகள் என் மனத்தில் நீங்காதநினைவாகப்பதிந்து விட்டிருக்கின்றன. இப்போது அவள் எங்கிருக்கிறாளோ, இருக்கிறாளோ இல்லையோ தெரியவில்லை. இப்போதும் அந்தப்பாட்டைக்கேட்டால் குபுக்கென்று கண்ணீர் பெருகுகிறது. அவளை நினைத்து நான் இப்படி நெகிழ்வது அவளுக்குத்தேரியவே போவதில்லை. எனக்கு அவள் மேல் அன்பே இல்லை என்பது தான் அவளுடைய நிரந்தர புகார். அவள் நட்பில் கூட கற்பு வேண்டும் என்பாள். அவளை என் வாழ்வில் மீண்டும் என்றாவது காண்பேனா?

    ReplyDelete
  2. அன்புள்ள ரமாவுக்கு
    நல்ல நட்பும் என்றோ ஒரு நாள்கண்டிப்பாக கண்ணுக்குத் தெரியும்.அப்சர் அக்காவை எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.என்னிடம் படிக்கும் ஒரு முஸ்லிம் மாணவனின் தாயாரின் பெயர் அப்சர்.உடனே நான் அவரிடம் சொன்னேன்.இது என் அக்காவின் தோழியின் பெயர் என்று.அவர் ஒன்றும் படிக்காதவர்.ஏதோ ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்ததைப் போலே கொஞ்சம் நாணம் கலந்த சிரிப்பை வெளியிட்டார்.நட்புச் செடி கருகுவதே இல்லை.பனிக் காலத்திலும் வெயிலின் போதும் கருகி காணாமல்போகும் புல் போல என்றோ பெய்யும் மழையில் துளிர்க்கும் புல்லின் நுனி போலே மீண்டும் பசுமை படரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.மீண்டும் சந்திப்பாய்.

    ReplyDelete