Thursday, August 5, 2010

ஆடி பெருக்கு

விகடனில் கி வ ஜ எழுதிய ஆடி பதினெட்டு பற்றிய கட்டுரை காலபெட்டகத்தில் படித்தேன்.என் நினைவுகளும் பின்னோக்கி ஓட ஆரம்பித்து விட்டன.
இளமையில் ஆடி மாதம் அழகான மாதமாக வரவேற்கப் பட்ட மாதம்.வரிசையான பண்டிகைகள் கண்டிப்பாக ஆடி அமாவாசைக்குப்புதுத் துணி கிடைக்கும்.கூடவே வளையல் ரிப்பன்....பெரிய எதிர்பார்ப்புடன் கொண்டாட்டம்.
ஆடி முதல் தேதி தலை ஆடி ......பள்ளிக்கூடம் லீவ் ..தேங்காய் சுடும் பண்டிகை வாதநாராயண மரத்தின் குச்சியின் நுனியை சீவி தேங்காய் பொட்டுக்கடலை பொடி வெல்லம் பொடித்துப் போட்டு வெந்நீர் அடுப்பில் சுட்டுத் தின்னும் தேங்காய் கண்டிப்பாக தேவாம்ருதம் தான்.எப்படியாவது அப்பாவிடம் permission வாங்கி விடுவேன்.
அப்புறம் குச்சி ஆட்டம்......தெருதெருவாக குச்சியைத் தட்டி கொண்டு ஓடுவோம்.
அப்புறம் ஆடி 18 காவிரியின் கரை புரளும் வெள்ளம்.வேடிக்கை பார்க்கப் போவது கூட ஒரு இனிமையான அனுபவம் செம்மண் கலரில் நுங்கும் நுரையுமாக வரும் காவிரித் தண்ணீரைப் பற்றி இனி நினைவுகளில் தான் தேட வேண்டும்.
காலையில் இருந்தே வாசலில் மேள சத்தம் கேட்க ஆரம்பித்து விடும் மாரியம்மன் கோயில் வாசலில் இருந்து ஒரு ஊர்வலம் போகும்.(மகாபாரதம் படித்து விட்டு போவர்கள் என்று நினைவு.)தலையில் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கொட்டு  கொட்டிக்கொண்டு புதுத் துணி சரசரக்க ஊர்வலம் போகும்.புதுப் பெண் மாப்பிளை .....இந்த வேடிக்கை பார்க்கவே முழு நாளும் கழிந்து விடும்
மாலையில் அப்பாவுடன் விளக்கு விடுவதை வேடிக்கைப் பார்க்கப் போவோம்.ஆடி 18 விழாக் கடைகளில் கண்டிப்பாக பேரிக்காய் வாங்குவோம்.
நிறைய.....நிறைய.......நினைவுக்கூட்டம்.....ஓடி வருகின்றன.என் கைகளுக்குத் தான் வேகம் பத்தாது.ஆற்றின் ஈரத்துடன் சிலு சிலுவென்று சாரலும் நனைக்கும்.அந்த பெரிய ஆலமரத்தின் இலைகள் அசையும் போதுமறைந்து கண்ணாமூச்சி காட்டும்சூரியன் வர்ண ஜாலங்களை காவிரியின் நீர்பரப்பின் ஜரிகையாய் நெளிய விடுவான்.இந்த அழகு இனி மேல் நினைவுப் பெட்டகத்தில் மட்டும் தான்,

No comments:

Post a Comment